இலங்கையில் இருந்து மனிதக்கடத்தல்: முக்கியமான சந்தேகநபர் என்.ஐ.ஏயினால் கைது

21 0

இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித கடத்தல் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகத்துக்குரியவரை, என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ‘சீனி அபுல்கான்’ என்பவரே இராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, அவர் தனது சகாக்களுடன் சேர்ந்து, குறித்த இலங்கையர்களை தொடருந்துகள், சிற்றூந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மங்களூருக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை ஒரு படகில் அடைத்து வைத்திருந்தார் என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

2021 ஜூன் மாதத்தில் கடத்தல்காரர்களிடமிருந்து 13 இலங்கை நாட்டவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மங்களூரு நகர பொலிஸாரால் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து 38 இலங்கை நாட்டவர்களை, தமிழ்நாட்டிற்குள் பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக அழைத்து வந்துள்ளார். கனடாவிற்கு இடம்பெயர்வதற்கான சட்டபூர்வமான ஆவணங்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவுவதாக உறுதியளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 2021 அக்டோபர் முதல் ஜனவரி 2024 வரை தலைமறைவான 3 பேர் உட்பட 10 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தலைமறையாகியுள்ள எஞ்சியவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணை தொடர்கிறது.