ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுகிறாரா திலித் ஜயவீர?

24 0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் திலித் ஜயவீர, அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் கடிதம் போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதில் சர்வஜன சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக திலித் ஜயவீர அறிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது இத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும், ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிலிருந்து விலகப்போவதாகவும் அவர் சர்வஜன சக்தி கூட்டணிக்கு அறிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மைத்தன்மை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Fact Seeker ஆராய்ந்து பார்த்ததில், அத்தகைய தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், மேற்கூறப்பட்டவாறு பகிரப்படும் கடிதம் போலியானது எனவும் திலித் ஜயவீரவின் கட்சியான தாயக மக்கள் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை மேற்கூறப்பட்டவாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என ஆரம்பத்தில் கருதப்பட்ட தம்மிக்க பெரேரா, தான் களமிறங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டு வெளியிட்ட கடிதத்தின் மாற்றியமைக்கப்பட்ட பிரதி எனவும் Fact Seeker தெளிவுபடுத்தியுள்ளது.