மிரிஹானவில் வீடுடைத்து பெறுமதியான பொருட்கள் திருட்டு ; சந்தேக நபர் கைது

19 0

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரினால் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது அவர்  பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.