எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்து முறையான நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும்

24 0

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விபத்தை ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் நினைத்த தொகையை நட்டஈடாக வழங்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது கடல் எல்லைக்குள்  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் கடல் சமுத்திரத்துக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டதுடன் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மந்தகதியிலேயே மேற்கொண்டு வருவதாகவே தெரியவருகிறது.

இதுவரை நட்டஈடாக பி.என்.ஐ.கழகத்தினால் 10,2 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவி்த்திருந்தார். ஆனால் இந்த நட்டஈட்டு தொகை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு  விநியோகிக்க பின்பற்றிய பொறிமுறை என்ன  என கேட்கிறோம்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் பாராளுமன்ற குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அந்த அறிக்கை பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது. அதனை வெளியிடாமல் இருப்பதற்கான காரணம் என்ன? இவ்வாறு வெளியிடாமல் இருப்பது பாரிய பிரச்சினை. அறிக்கையை பார்ப்பதற்கு நாட்டு மக்களுக்கு இடமளிக்க வேண்டும். முடியுமானால் இன்றே அதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் வழங்குவதற்காக பி.என்.ஐ.கழகத்துக்கு தேவையான தொகை ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. இது முறையல்ல. விபத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பே அது தொடர்பில் மதிப்பீடு செய்து, விபத்தை ஏற்படுத்திய தரப்பிடமிருந்து அதற்கான நட்டஈட்டை கோர வேண்டும்.

எமது நாடு சுயாதீன நாடு. இயைறாண்மையுள்ள நாடு. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது எமது கடல் சூழலும் எமது நாட்டு மக்களுமாகும். அதனால் அதுதொடர்பில் மதிப்பீடு செய்து நட்டஈடு கோறுவதற்கு பூரண அதிகாரம் எமது நாட்டுக்கு இருக்கிறது.

அவ்வாறு இல்லாமல் விபத்தை ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் ஒரு தொகை பணத்தை வழங்கி, அதனை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பகிந்தளிக்குமாறு தெரிவிப்பது போன்றதொரு நிகழ்வே தற்போது இடம்பெற்றிருக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

அதனால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் முறையான மதிப்பீட்டின் அடிப்படையில், நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.