கடுமையான தீர்மானங்கள் கட்டம் கட்டமாக மறுசீரமைக்கப்படும் – கல்வி அமைச்சர்

24 0

பங்களாதேஷ் நாட்டின் தற்போதைய நிலைமை இலங்கையில் தோற்றம் பெறும் சூழல் காணப்பட்ட போது தனி நபராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால்களை பொறுப்பேற்றார்.

பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருந்தால் இன்று எவரும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருக்க முடியாது. பொருளாதார மறுசீரமைப்புக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கட்டம் கட்டமாக மறுசீரமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09)  இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பங்களாதேஸ் நாட்டின் நிலைமை கவலைக்குரியது.2022 ஆம் ஆண்டு  இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்தது.

எரிபொருள்,எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசை  தீவிரமடைந்தது.அனைத்து பகுதிகளிலும் போராட்டம் இவ்வாறான கடுமையான சூழ்நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரமராக பதவியேற்றார்.

போராட்டம் தீவிரமடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.பங்களாதேஸ் நாட்டின் பாராளுமன்றத்தை போராட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.2022 ஆம் ஆண்டு எமது பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கும், சபாநாயகரின்  வாசஸ்தலத்தை  இடித்தழிப்பதற்கும்  ஒருதரப்பினர்  வருகை தந்தார்கள்.

பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருந்தால் இன்று எவரும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருக்க முடியாது.உரையாற்றவும் முடியாது.ஆகவே யதார்த்தத்தை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஜனநாயகத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒருபோதும் வெற்றிப் பெறாது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 53 பில்லியன்  டொலர் சர்வதேச கடன்களையும்,43 பில்லியன் ரூபா தேசிய கடன்களையும் மறுசீரமைக்கும் தேவை காணப்பட்டது.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன்  பொருளாதார திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.பணவீக்கம் குறைவடைந்துள்ளது.அத்துடன் வெளிநாட்டு கையிருப்பு நிலைபேறான தன்மையில் காணப்படுகிறது.வெளிநாட்டு கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

பொருளாதார கொள்கையை ஸ்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்காகவே பொருளாதார நிலைமாற்றம் மற்றும் அரச முகாமைத்துவ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.பொருளாதார மீட்சிக்காக எடுத்த கடுமையான தீர்மானங்கள் கட்டம் கட்டமாக மறுசீரமைக்கப்படும்.

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை தோட்ட கம்பனிகள் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தின.சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12 ஆம் திகதி  சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

நிர்ணய சபையின் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் தொழில் அமைச்சு உறுதியாக உள்ளது என்றார்.