செப்டெம்பர் 3 இல் மாகாணசபைத்தேர்தல் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு

24 0

மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் வெள்ளிக்கிழமை (9) மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இச்சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் கடந்த 6 ஆம் திகதி மாகாணசபைத்தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து இச்சட்டமூலம் வெள்ளிக்கிழமை (9) சட்டங்கள் தொடர்பான பாராளுமன்றக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இச்சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டிருந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அதன்படி மேற்குறிப்பிட்டவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டங்கள் தொடர்பான குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதனைத்தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி இச்சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.