காணிகளை விடுவிக்க கோரி முள்ளிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

246 0

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட காணிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பட்டில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குறித்த பேரணி ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று, மன்னார் ஆயர் இல்லத்தினூடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டது.