இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட 5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றல்

39 0
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட 5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை வெள்ளிக்கிழமை (26)  திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம்  வேதாளை மரைக்காயர் பட்டினம்,  மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில்  இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

கடல் வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய மத்திய சுங்கத்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் அதையும் மீறி  சமீப காலமாக அதிக அளவில்  கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது.

அந்த பெட்டிகளை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து  ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் 57 ஆயிரம் மாத்திரைகள் வீதம்  10 பெட்டியில் 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி  மாத்திரைகளின் இந்திய மதிப்பு சுமார்  1 கோடி 80 இலட்சம் என்றும் சர்வதேச மதிப்பு மூன்று கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.