மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணேவல்பொல – தாச்சிஹல்மில்லேவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (26) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கணேவல்பொலவிலிருந்து கலென்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது , மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முரியாகடவல பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.