ஜனாஸா எரிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அளித்த பதிலில் திருப்தியில்லை – கலீலுர் ரஹ்மான்

33 0
ஜனாஸா எரிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் திருப்தி இல்லை என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பாக முடிவெடுத்த குழு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மனங்களை சாந்தப்படுத்தவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உடனடியாக நியமிக்க வேண்டும்.

தகனம் மூலம் அநியாய சம்பவத்தை செய்த குழுவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் அனுப்பிய எழுத்துமூல மகஜருக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியுள்ள பதில் திருப்தியளிக்க வில்லை.

பூகோள அரசியல் சதிக்காக உடல்களை தகனம் செய்ய முடியும் என்ற முடிவை ஒரு சிறு குழுவினர் எடுத்தார்கள் என்றால் அவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கிறதா? என்று கண்டுபிடிப்பது நாட்டுக்கு நல்லது. ஏனெனில், நாடளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிந்தனை கொண்டவர்கள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக நின்றபோது அதே அரசாங்கத்தின் மற்றுமொரு தரப்பு எதிர்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர்களான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை சாதாரணமாக கடந்து செல்லவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது.

அத்துடன், பேராசிரியர் மெத்திகாவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கவும் முடியாது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அமைச்சின் ஊடாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா வைரஸ் நீரினால் பரவுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த குழுவின் அறிக்கைக்கு சிங்கள தேசியவாத முகாமை பிரதிநிதித்துவப்படுத்திய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கலகொட அத்தே ஞனசார தேரர், விமல் மற்றும் கம்மன்பில எம்.பி.க்கள் ஆதரவாக இருந்தால், பேராசிரியர் மேத்திகா பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஏன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதை எதிர்த்தது?

முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமை இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைத்தது என்பதையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இதுவரை பல்வேறு தரப்பினராலும் வெளியான கருத்துகள்  அனைத்தும் உண்மைகளையே உணர்த்துகின்றன. இந்த அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் இதயங்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பரப்பக்கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாக அரசியல் மேடையில் இந்த விடயம் உள்ளது.

இவற்றை கவனத்தில் கொண்டு கொரானாவின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 23/06/2024 அன்று நான் எழுதிய உருக்கமான இரண்டு பக்க கடிதத்தில் என்னை சாதாரண குடிமகன் போன்று கருத்தில் கொண்டு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பொது உறவுகள்) திரு. டபிள்யூ.எம்.பாத்தியா விஜயந்த அவர்கள் ஜனாதிபதி செயலாளருக்குப் பதிலாக என ஒப்பமிட்டு அனுப்பிய மூன்று வார்த்தைகள் கொண்ட பதில் கடிதம் எனக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்திற்கோ திருப்தியானதாக இல்லை.

ஏனென்றால், “கோவிட் இறந்த உடல்களை தகனம் செய்வது குறித்து” என்ற வார்த்தை கூட இல்லாமல் “கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்” என்று மட்டுமே கடிதம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்த பதில் கடிதத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளபடி, அதாவது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நான் வைக்கும் “நம்பிக்கை” அப்படியே உள்ளது. எனவே, கொவிட் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவை மீண்டும் நிறுவ கோரிக்கை விடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.