பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மாநிலம் தழுவிய அளவில் ஆக.1-ல் இடதுசாரிகள் மறியல்

30 0

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேஷன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைவஞ்சித்துள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியையும் ஒதுக்காமல், தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச் செய்யாமல் மக்களை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க நிவாரணம் ஏதும் இல்லை. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டையும், தமிழக விரோதப்போக்கையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.