கொழும்பு – வோர்ட் பிளேஸில் முச்சக்கரவண்டியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு : இருவர் கைது

24 0
கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  கிராண்ட்பாஸ்,  சமகி மாவத்தை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொனவில மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 30 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டது.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன்,  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.