நாட்டின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாதுகாப்புத்துறை பிரதானிகளுக்கு பணிப்புரை

57 0

ஜனாதிபதி தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள், நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அனைத்து பாதுகாப்புத்துறை பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (26) பாராளுமன்றக் கட்டிட தொகுதியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புப் படைகளின் ஆளணி பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில்  வேட்பாளர்கள், நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண் இருக்கிறது.அரசியலமைப்பு மற்றும் நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது கடுமையான பல தீர்மானங்களை மேற்கொள்ள நேர்ந்தது. அந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

அந்த வகையில் அவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று எதிர்காலத்திலும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களினதும் நடவடிக்கைகள்  சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.