நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை சட்டமாக்குவது நியாயமற்றது – ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

28 0

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஊடாக சட்டமாக்குவது நியாயமற்றது ஏனெனில் இந்த அரசாங்கம்  இன்னும் இரு மாதங்களே பதவியில் இருக்கும்.ஏற்றுக்கொண்டுள்ள செயற்திட்டங்களை திருத்தம் செய்வதாக நாணய நிதியத்துக்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது முறையற்றது என அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம்,அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் குறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இவ்வாறான சட்டமூலம் 2022 ஆம் ஆண்டு இயற்றப்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியிருக்கமாட்டார்.

எதிர்க்கட்சி என்பதால் நாங்கள் அனைத்தையும் எதிர்க்கபோவதில்லை.இந்த சட்டமூலத்துக்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம்.இருப்பினும் ஒருசில விடயங்கள் குழுநிலையின் போது திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கு முன்னர் அரச நிதி பொறுப்பு தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது.ஆனால் அந்த சட்டத்துக்கு பொறுப்புக்கூறல் அதிகாரம் வழங்கப்படவில்லை.தற்போது உருவாக்கப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்திலும் பொறுப்புக் கூறல் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.ஆகவே  சட்டத்தின் ஏற்பாடுகளின் அம்சங்களுக்கு பொறுப்புக்கூறல் அத்தியாவசியமாக்கப்பட வேண்டும்.

சட்டமூலத்தின் 15 ஆவது உறுப்புரையின் அரசின்  முதன்மை செலவுகளை 13 சதவீதமாக வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.உலகில் எந்த நாடுகளிலும் முதன்மை செலவுகளை வரையறுக்கும்  சட்டங்கள் காணப்படுகின்றன.20 சதவீதத்துக்குள் தான் செலவுகள் வரையறுக்கப்படுகின்றன.செலவுகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச வருமானத்துக்கும் செலவுகளுக்கும் இடையில் இணக்கப்பாடான தன்மை காணப்பட வேண்டும்.

பொருளாதாரம் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.காலையில் ஒன்றை பேசி விட்டு இரவில் பிறிதொன்றை பேசும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை.மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தையே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.நற்செய்தி என்று அரசாங்கம் விடுக்கும் அறிவிப்புக்களை மக்கள் தகாத வார்த்தைகளால் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சியை நாங்கள் எதிர்ப்பதாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.பொருளாதார  நெருக்கடியின் போது சவால்களை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் தப்பிச் செல்லவில்லை.

2022 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்து சட்டத்தரணிகள் முன்வைத்த நிபந்தனைகளை முன்வைத்தோம்.அவர் அதனை ஏற்கவில்லை.இதனை கோட்டபய ராஜபக்ஷவிடம் கேட்டுப்பாருங்கள்.

பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலத்தை ஏற்க போவதில்லை.ஏனெனில் இந்த சட்டமூலத்தின் இரண்டாம் பந்தியில் ‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் இன்னும் இரண்டு மாதங்களே பதவியில் இருக்கும்.அரசாங்கம் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை திருத்துவதாக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியான பீற்றர் ப்ரூவரிடம் குறிப்பிட்டுள்ளோம்.

பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலத்தில் பொருளாதார முன்னேற்றத்தின் இலக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.2048 ஆம் ஆண்டு அபிவிருத்தியடைவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

மறுபுறம் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதத்தால் பொருளாதார வளர்ச்சியை அடைந்துக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது.அரசாங்கத்தின் மதிப்பீட்டுக்கு அமைய அவ்வாறாயின் 2075 ஆம் ஆண்டு தான் அபிவிருத்தியடைய வேண்டும்,ஆகவே இந்த சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.