பலஸ்தீனத்தின் தேசிய ஒற்றுமைக்காக இணைந்து செயற்படுவது தொடர்பில் ஃபத்தா உட்பட ஏனைய பலஸ்தீன அமைப்புகளுடன் சீனாவில் தான் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் நேற்று அறிவித்தது.
பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸாவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தொடர்பானது என சீனா தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்காக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மூசா அபு மர்சூக், பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் ஃபத்தா கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் அலோல் மற்றும் மேலும் 12 பலஸ்தீன குழுக்களின் பிரதிநிதிகள் சீனாவுக்குச் சென்றிருந்தனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ கூறுகையில், காஸா யுத்தத்தின் பின்னர் இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இக்குழுக்கள் இணைங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் மூசா அபு மர்சூக் இது தொடர்பாக கூறுகையில், “தேசிய ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தில் இன்று நாம் கையெழுத்திட்டோம். இப்பயணத்தை முழுமையாக்குவதற்கான வழியானது தேசிய ஒற்றுமையாகும் என நாம் கூறுகிறோம். தேசிய ஒற்றுமைக்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். அதற்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.
கடந்த ஒக்டோபரில் ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியான ஆதரவு அளித்து வருவதற்காக சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஃபத்தா அதிகாரி மஹ்மூத் அல் அலோல் கூறினார். பலஸ்தீன மக்கள் அனைவரினதும் அன்பும் நட்பும் சீனாவுக்கு உள்ளது என அவர் கூறினார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் கருத்துத் தெரிவிக்கையில், நல்லிணக்கமானது பலஸ்தீன அமைப்புகளின் உள்ளக விவகாரம் எனவும், ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இன்றி, அதை அடைய முடியாது எனவும் கூறினார்.