பொலிஸ்மா அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப் பாதிக்காது சட்டம் தெளிவாகக் கூறுகிறது

25 0

பொலிஸ் மா அதிபர் பதிவி இடைநிறுத்த பட்டாலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதன்கிழமை (24) யாழ் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :-

உயர்நீதிமன்றத்திலே பொலிஸ்மா  அதிபருடைய நியமனம் சம்மந்தமாக இடைக்கால உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் விவாதம் செய்யபட்டு இந்த வழக்கினை கொண்டு செல்வதற்கு அனுமதியினை வழங்குகின்ற அதே நேரத்தில் ஜனாதிபதியினாலே  நியமனம் பெற்ற பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சட்டபூர்வமானதாக இல்லை என்ற காரணத்தினாலே தேசபந்து தென்னக்கோன் என்ற பொலிஸ்மா அதிபரை அந்த பதவியில் இருந்து இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வந்த பின் அமைச்சரவை அவசர அவசரமாக கூடி ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தம் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதான  செய்தி எங்களுக்கு கிட்டியிருக்கின்றது.

ஒரு நிரந்தர பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்த முடியாது என்ற கருத்து நிலவுவதாக நாம் அறிகின்றோம்.

சட்டத்திலே எந்தவித தடையும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன் .

எங்களுடைய அரசியலமைப்பிலே எப்பொழுது ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பது மிக மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

செம்பரம்பர் 17 ஆம் திகதி ஒக்ரோபர் 17 ஆம் திகதிக்கும் இடையிலே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடாத்தபட்டே ஆக வேண்டும்.அதனை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே தான் கொடுக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் கையிலே அது கிடையாது.ஆகவே தேர்தல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் எந்தவித நொண்டி சாட்டுகளும் இல்லாமல் உடனடியாக தேர்தல் திணைக்களத்தின் அறிவித்து சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.