தபால் மூல வாக்களிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும் – ஊடகத்துறை அமைச்சு

30 0

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்.தேர்தல்கள் ஆணைக்குழு இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சபையில்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது.தேர்தல் காலங்களில் ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது.நாட்டில் 17 பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி சேவைகள் உள்ளன. அதேபோல் 52 வானொலி அலைவரிசை மற்றும் தொலைக்காட்சி சேவைகள் உள்ளன.

தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கை மற்றும் ஒளிபரப்பு பணிகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆகவே அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ள ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்.

தேர்தல்கள்  ஆணைக்குழு இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக இந்த யோசனையை நாங்கள் முன்வைக்கிறோம் என்றார்.