முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

39 0

முல்லைத்தீவு    கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் உள்ள விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீதே இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அவர் காயமடைந்த நிலையில், மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதியின் ஓரமாக உறங்கி கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, இன்று அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அந்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.