நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி சரிவர விசாரிக்கவில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி

32 0

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைசிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்ததருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆள்மாறாட்ட வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் சிறப்புக் குழுஅமைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், சிறப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஏன் சிறப்புக் குழு அமைக்கவில்லை. 2019-ல் பதிவான வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதை ஏற்க முடியாது. சிபிசிஐடி வழக்கை முறையாக விசாரிப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்ந்தால், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிவரும். சிபிசிஐடி கோரிய ஆவணங்களை, தேசிய தேர்வு முகமை வழங்கிவிட்டதா? என்றார்.

மாணவர் அடையாளம்… தேசிய தேர்வு முகமை தரப்பில், சிபிசிஐடி கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, மாணவர்களின் ஆதார் அட்டை தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டால், அதைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாமே? என்றார்.

அதற்கு தேசிய தேர்வு முகமைதரப்பில், ஆதார் அட்டை எதற்கும் கட்டாயமாக்கக் கூடாது எனஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்குஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அப்படியெனில், மாணவர்களின் அடையாளம் எதன் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது? என்று கேட்டார்.

ஆதார் கட்டாயமில்லையா? – அதற்கு தேசிய தேர்வு முகமை தரப்பில், மாணவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்களது கைரேகை மூலம் அடையாளப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சாதாரண விவசாயி ரூ.6 ஆயிரம்மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்கிறீர்கள். ஆனால், நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? சிபிசிஐடி இந்த வழக்கை திறனற்று விசாரிக்கிறது. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.

பின்னர், வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.