ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

22 0
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது:

“வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நாடு  ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் மீட்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க எமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் நட்டமடையும்  நிலையை தவிர்த்து இலாபம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளன.

உலகில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஏனைய நாடுகள் இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எட்டவில்லை. இந்த ஸ்திரத்தன்மையை பேணுகின்ற அதேவேளை பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும்,  அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட வரித் திருத்தங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் சில எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அந்த முடிவுகளின் நன்மைகளை மக்கள் பெறும்போது, அந்த எதிர்ப்பு  மறைந்துவிடும். உலகில் உள்ள ஏனைய நாடுகள் நம் நாட்டை விட அதிக சதவீத வரிகளை வசூலிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த நெருக்கடியின் போது, மக்களிடம் பணம் இருந்தது.ஆனால் வாங்குவதற்கு பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. எனினும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமையை நாம் யாரும் மறந்துவிடவில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது ஆதரவை வழங்குவோம். மேலும் கட்சி நிறமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மக்களும் தீர்மானித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளில்  இணைந்திருந்தாலும் வாக்காளர்கள் மாறப் போவதில்லை என்பதையும் சொல்ல வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் தனி நபரை பார்த்தன்றி வேலைத்திட்டத்தைப் பார்த்தே செயற்படுவார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக அடுத்த தேர்தலில் பதுளை பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக வாக்குகளை பெறுவார் . நமது நாட்டு மக்கள் செய்நன்றி மறக்காத நன்கு சிந்தித்து பணியாற்றுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.