வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

20 0

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுழற்சி தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதியில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் படகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை, மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.