ஆசிரியர்கள், அதிபர்கள் திங்கள் முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில்!

23 0

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், நிதியமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர், ஜனாதிபதி  செயலாளர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்மானம் கிடைக்கவில்லை. ஆகவே திங்கட்கிழமை முதல் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபடுவார்கள். இவ்விரு வாரங்களுக்குள் சாதகமான தீர்வினை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிப்போம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. மாறாக, போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நியமித்த குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றார்.