ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நல்லது – சி.வி விக்னேஸ்வரன்

28 0
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மையே.

இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் அவர்கள் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற முனைப்பு காட்டுவார்கள்.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எவரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலைமை ஏற்படும் போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும்.

ஏற்கனேவே நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகிறது. அந்நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால் நாடும் மிக மோசமான பொருளாதார பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.

அத்துடன், தேர்தலுக்காக பெருமளவான நிதிகள் செலவழிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்படும். அதுவும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

எனவே, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு வருட காலத்திற்கு ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.