ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு ஜயம்பதியின் பதில்!

30 0

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது, ​​ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்ட போதிலும், குறித்த பதவிக் காலத்தினை அதிகரிக்க கூடிய 6 வருட அதிகப்பட்ச மாற்றத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படாமைக்கான காரணம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் என்பதால் ஆகும் என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

காலியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 19 ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கு ஜயம்பதி விக்கிரமரத்ன இன்று ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்திருந்தார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், சட்ட வரைவுத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்னவும் இதில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 19வது அரசியலமைப்புச் சட்டத்தின் 83வது சரத்தை திருத்தத் தவறியமை, அனுபவமின்மையால் ஜயம்பதி விக்கிரமரத்ன செய்த பிழையாகும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி ஊடகங்களுக்கு இன்று அறிவித்தல் விடுத்திருந்தார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தயாரிக்கும் நடவடிக்கையை எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக ஜயம்பதி விக்கிரமரத்ன தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தச் செயல்பாட்டின் போது தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு வரைவும் அமைச்சரவை உப குழுவுடன் கலந்துரையாடப்பட்டதாகவும்,

உப குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி வரைவை சட்ட வரைவுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ஜயம்பதி விக்கிரமரத்ன தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபரை பல தடவைகள் அழைத்து இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டின் காரணமாக சட்டமூலத்தில் பல மாற்றங்களைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 19வது திருத்தச் சட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​அரசாங்கம் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர், எந்தவொரு விதிமுறைகளுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்ததாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.