யாழில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய இருவர் கைது!

32 0
யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திய இருவர் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்துடன் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழிலுள்ள தீவுப் பகுதிகளில் ஒன்றான புங்குடுதீவுப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை காவலரண் ஊடாக சுமார் நூறுகிலோ மாட்டிறைச்சி கடத்தப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கடற்படையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவ்வாறு மாட்டிறச்சி கடத்திய இருவரையும் அவர்கள் வைத்திருந்த மாட்டிறைச்சியும்  இக் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் கடற்படை உதவியுடன் கைப்பற்றி   ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட இருவரும் யாழ் நகரை அண்மித்தவர்கள் எனவும் அவர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்பவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,   அண்மைக்காலமாக புங்குடுதீவு பகுதியில் மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக கொண்டு செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.