மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி-யேர்மனி தென்மாநிலம், நூரன்பேர்க். 13.7.2024

1350 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியின்
தென்மாநிலத்துக்கான போட்டி நூர்ன்பேர்க் நகரில் 13.07.2024 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தென்மாநிலத் தமிழாலயங்களும் நகர்வாழ் மக்களும் இணைந்து போட்டிகளில் பங்கேற்றனர்.

காலை 09:30 மணிக்குத் தாயக விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமான பொதுச் சுடரும் ஈகைச் சுடரும் ஏற்றப்பட்ட தன் பின்னர், யேர்மனி நாட்டின் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடி ஆகியவை ஏற்றிவைக்கப்பட்டன.பொதுச்சுடரை முன்சன் நகரைச் சேர்ந்த திரு. பரமானந்தம் முருகதாஸ் அவர்களும் ஈகைச் சுடரை நூர்ன்பேர்க் நகரைச் சேர்ந்த திரு. விக்டர் விஜய ரவீந்திரன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை நூர்ன்பேர்க் நகரைச் சேர்ந்த திரு. கனகையா சிறீகாந்தன் அவர்களும் ஏற்றி வைத்தனர். மாவீரர்களின் திருஉருவ படத்திற்கு மலர்மாலையை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் தென்மாநிலப் பொறுப்பாளர்கள் திரு. சபேசன் கிருபாமூர்த்தி அவர்களும் செல்வன் நேருதன் அகிலரூபன் அவர்களும் அணிவித்தார்கள். தொடர்ந்து ஆலன், நூர்ன்பேர்க், ஸ்ருட்காட், முன்சன் ஆகிய தமிழாலயங்களின் 7 அணிநடையும் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றிச் சுடரேற்றலுடன் போட்டிகள் தொடங்கின.

தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகள் எனப் பலரும் வருகைதந்து சிறப்பித்தனர்.தொடர்ந்து போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற போட்டியாளர்களுக்குப் பதக்கங்களும் புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்சன் தமிழாலயம் 1ஆம் இடத்தையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் இடத்தையும் ஸ்ருட்காட் தமிழாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன. நிறைவாகத் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் தென்மாநிலத்துக்கான மாவீர ர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி சிறப்புடன் நிறைவுபெற்றது.

 குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுகளும் நடைபெற்றது இறுதியில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.