அங்கோலாவின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் எடுவார்டோ டோஸ் சான்டோஸின் மகன் ஜோஸ் பிலோமெனோ டோஸ் சான்டோஸுக்கு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 5 வருட சிறைத்தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது 46 வயதான ஜோஸ் பிலோமெனோ டோஸ் சான்டோஸுக்கு 4 வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றமொன்று 5 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது ஆனால், மேன்முறையீட்டில், அந்த தீர்ப்பு இரத்து செய்யப்பட்டது. தற்போது அத்தண்டனை மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1979 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 38 வருடங்கள் அங்கோலாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோஸ் எடுவார்டோ டோஸ் சான்டோஸ். அவர் அதிகாரத்திலிருந்து விலகிய பின்னர், அவரின் குடும்பத்தினர் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அங்கோலா தேசிய வங்கியிலிருந்து பிரிட்டனிலுள்ள வங்கிக் கணக்குக்கு 500 மில்லியன் டொலர்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோஸ் பிலோமெனோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
அவரின் தந்தை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இப்பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு நீதிமன்றமொன்று ஜோஸ் பிலோமெனோவுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் 2020 ஆகஸ்ட் மாதம் இத்தீர்ப்பை இரத்துச் செய்ததுடன், வழக்கு விசாரணையை மீள நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜோஸ் பிலோமெனோவுக்கு மேற்படி 5 வருட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி அந்நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளது.