வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கல் !

39 0

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் இந்த நிகழ்வில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர் கூறுகையில்,

மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின் கோரிக்கையை ஏற்று, மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கௌரவ பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவர்கள் இருவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. நீண்ட கால ஏக்கத்துக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பிரதமர் தெரிவிக்கையில்,

தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் முதன் முதலில் தனது ஆதரவை தெரிவித்தார்.

ஆளுநர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று 165 பேருக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்துள்ளன. நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் தங்களின் கடமைகளை உரியவாறு முன்னெடுக்க வேண்டும் என்றார்.