சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

445 0

Black July ICET PR in Tamil_Seite_1

சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு ஜூலை’ வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் உயிர், உடமைகள் பொருளாதார வாழ்வு என தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தை குறிவைத்து நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வாகவே 1983 ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலை அரங்கேறியது. இலங்கை தீவின் திசையெங்கும் எதிரொலித்த தமிழர்களின் அவலக்குரல்கள் சிங்கள காடையர்களின் கொக்கரிப்புக்களுக்குள் அமுங்கிப்போயிருந்தது.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொலைவெறியாட்டத்தின் உச்சமாக வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் அமைந்திருந்தது.

‘நான் இறந்த பின்னர் எனது கண்களை இரண்டு தமிழர்களுக்கு பொருத்திவிடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை என் கண்கள் காணட்டும்’ என்று நீதிமன்றத்தில் கூறிய குட்டிமணி அவர்களின் கண்கள் இரண்டையும் பிடுங்கி தரையில் போட்டு காலால் நசுக்கியமை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் கொடூரத்தை உலகறியச் செய்திருந்தது.

‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ அவர்கள் எம்மைப் பற்றி எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது’ என்று சிறிலங்கா ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பகிரங்கமாக தெரிவித்தமை தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் பின்னணியில் சிறிலங்கா அரசு இருப்பதை உறுதிப்படுத்தியது.

சிறிலங்காவின் ஆட்சி, அதிகாரம், நீதி, இராணுவம், காவல்துறை என்பன சிங்களர்களுக்கான கட்டமைப்பே அன்றி தமிழர்களுக்குமானதல்ல என்பதை இடித்துரைக்கும் அறிவிப்பாகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இக்கூற்று அமைந்திருந்தது.

அரசியல் சாசனத்தில் திருத்தமென்றும் தீர்வுக்கான பொதி தயாரிப்பென்றும் வட்டமேசை மாநாடென்றும் அனைத்துக்கட்சி கூட்டமென்றும் இருதரப்பு, முத்தரப்பு பேச்சுகளென்றும் அத்தனை முயற்சிகளும் காலங்கடத்துவதுடன் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நோக்கத்துடனே கடந்த காலங்களில் சிங்கள அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கான உபாயமாகவே தீர்விற்கான முயற்சி என்ற நாடகத்தை நடத்திகொண்டிருக்கிறது ரணில்-மைத்திரி தலைமையிலான அரசு.

ஒற்றையாட்சித் தத்துவத்தின் அத்திவாரத்தில் உருவாக்கப்பட்டு சிங்கள பௌத்த பேரினவாத முலாம் பூசப்பட்ட சிறிலங்கா அரசியல் சாசனங்களுக்குள் ஒருபோதும் தமிழர்களது அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வினை காணமுடியாது என்பது வரலாறு மெய்ப்பித்து நிற்கும் பேருண்மையாகும்.

தமிழின அழிப்பினை நோக்கிய பல்பரிமாண அரச ஒடுக்குமுறையின் நீட்சியானது உயிர்வாழ்விற்கே ஊறுவிழைவிக்கும் இனப்படுகொலையாக இன்று கோரவடிவெடுத்து தமிழர் தாயகத்தை சுடுகாடாக்கிக்கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் ஆட்சி, அதிகாரம் மற்றும் நீதித்துறை என அனைத்து கட்டமைப்புகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்கள் வியாபித்து நிற்பதன் வெளிப்பாடாகவே 68 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினை முடிவின்றித் தொடர்ந்து வருகின்றது.

எமது மக்கள் சந்தித்துவரும் சாவும், அழிவும், அவலமும் நிறந்த முடிவற்ற வாழ்வின் மையப்புள்ளியாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர் விரோத நிலைப்பாடு திகழ்ந்துவருகின்றது.

மனித உரிமைகளை காலில்போட்டு மிதிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலும், முடிவின்றி தொடர்ந்துவரும் அதன் தமிழர் விரோதப் போக்கும் தனித்தான தேசமாக தமிழர்கள் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற கையறு நிலைக்கே தமிழர்களை இட்டுச்செல்கிறது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் அடிப்படையில் தோற்றம்பெற்ற அரசியல் போராட்டமாகட்டும் ஆயுதப்போராட்டமாகட்டும் இன்றைய அறவழிப்போராட்டமாகட்டும் அனைத்துமே ஒடுக்கப்படும் தமிழ்மக்களின் விடுதலைக்கான போராட்டமாக சிங்கள அதிகார வர்க்கம் ஏற்க மறுத்துவருவதன் மறுதலிப்பே போராட்டத்திற்கான விதையாக மாறிவருகின்றது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.