பெரும் போகத்தில் 26 இலட்சத்து 37 ஆயிரத்து 826 கிலோ நெல் கொள்வனவு

33 0

நாடளாவிய ரீதியில் காணப்படும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான  நெற் களஞ்சியசாலைகள் மூலம்  2023, 2024 பெரும் போகத்தில் 26 இலட்சத்து 37 ஆயிரத்து 826 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) வாய்மூல விடைக்கான  வினாக்கள் வேளையில் டி வீரசிங்கர எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு  353 களஞ்சியசாலைகள் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் 24 களஞ்சிய சாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 களஞ்சிய சாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 களஞ்சிய சாலைகளும் வவுனியாவில் 7 களஞ்சிய சாலைகளும் முல்லைத்தீவில் 14 களஞ்சிய சாலைகளும் மன்னாரில் 4 களஞ்சிய சாலைகளும்  யாழ்ப்பாணத்தில் ஒரு களஞ்சிய சாலையும் அம்பாறை மாவட்டத்தில் 67 களஞ்சிய சாலைகளும் பதுளை மாவட்டத்தில் 7 களஞ்சிய சாலைகளும் கண்டி மாவட்டத்தில் 10 களஞ்சிய சாலைகளும் அனுராதபுரம் மாவட்டத்தில் 69 களஞ்சிய சாலைகளும் பொலனறுவை மாவட்டத்தில் 56 களஞ்சிய சாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் 9 களஞ்சிய சாலைகளும் குருணாகல் மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும் புத்தளம் மாவட்டத்தில் நான்கு களஞ்சிய சாலைகளும் மாத்தறை மாவட்டத்தில் 2 களஞ்சியசாலைகளும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு களஞ்சிய சாலைகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 8 களஞ்சிய சாலைகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு களஞ்சிய சாலையும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன.

2023, 2024 பெரும் போகத்தில் 26 இலட்சத்து 37 ஆயிரத்து 826 கிலோ நெல்  அம்பாறை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அரச துறையினால் உபயோகிக்கப்படாத களஞ்சிய சாலைகள் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.