யாழில் திருநங்கையை கடத்திய மூவருக்கு விளக்கமறியல்!

26 0

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கொழும்பினைச் சேர்ந்த 24 வயதுடைய குறித்த திருநங்கை நேற்று முன்தினம் ஊர்காவல்துறை பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை மூவரடங்கிய குழு அவரை வாகனத்தில் ஏற்றி ஆட்களற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றது.

அங்கு அழைத்துச் சென்று, “இங்கே ஏன் வந்தாய்” என அந்த திருநங்கையை வினவியவேளை ஊர்காவல்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிவித்து அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை குறித்த கும்பலிடம் வழங்கினார்.

இதேவேளை அந்த இளைஞனுக்கு குறித்த கும்பல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட வேளை, அந்த கும்பலில் இருந்தவரின் தொலைபேசி இலக்கம் குறித்த இளைஞனிடம் ஏற்கனவே இருந்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து ஊர்க்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

குறித்த மூவரையும் பொலிஸார் இன்றையதினம் கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், குறித்த சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டது.