முல்லைத்தீவில் களவாடப்பட்ட புவித்தொடுப்பு வயர் : விரைந்து சீர்செய்த மின்சார சபையினர்

35 0

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இனந்தெரியாதோரால் களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம இன்று (10.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு கிராமத்திற்கான மின்சாரம் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6.30 மணி வரை துண்டிக்கப்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் காலை 6.30 மணிக்கு மீண்டும் மின் இணைப்பினை வழங்கியுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்சார சபையின் மின் அத்தியட்சகர், மின்சாரசபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் புவித்தொடுப்பு வயரை களவாட பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்தி கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர். இது தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தவர்கள் தகவலினை 0763505860 அமரதுங்க (Amarathunka) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியும்.