மாட்டை கடத்திச்சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு!

36 0
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச்சென்ற இருவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டிநின்ற மாட்டினை திருடிச்சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்த இளைஞர்கள் அவர்களை கட்டிவைத்து நையப்புடைத்ததுடன் வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த இருவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்றுநேரம் முரண்பாடான நிலமை ஏற்பட்டிருந்தது.

எனினும் குறித்த இருவரையும் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் பொதுமக்களிடத்தில் உறுதியளித்த நிலையில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச்செல்கின்றமை தொடர்பாகப் பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.