வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

44 0

வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடை உத்தரவினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.

இது தவிர, இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே, எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைக்கும் நிகழ்வானது இன முரண்பாட்டை, இன வன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு இந்த  தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  ஆஜராகியிருந்தனர்.

இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள்  சமர்ப்பணங்களையும் ஆராய்ந்தே நீதிவான் வழக்கினை ஒத்திவைத்தார்.

செய்திப் பின்னணி

சம்மாந்துறை பிரதேசத்தில் சட்ட ரீதியாக அனுமதி பெறாமல் வீரமுனை கிராமத்துக்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரமொன்றை அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களால் முறைப்பாடொன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபரால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், கடந்த சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்டதுமான சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரமொன்று  அமைப்பதற்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வினை நடத்தினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஏற்பட சாத்தியமுள்ளது என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், சமாதான குலைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், இந்த  நிகழ்வை நடாத்துவது உசிதமானதல்ல என்பதனால் அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெறாதவாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன்  உட்பட்டோருக்கு வீரமுனை கிராமத்துக்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸாரினால் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோது எதிர்வரும் 2024.06.27 அன்று வரை தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவை நீடித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.