15 வயது மாணவனை நிர்வாணமாக்கி தாக்கிவிட்டு கைப்பேசியை பறித்துச் சென்ற மாணவன் உட்பட மூவர் கைது!

58 0

15 வயது மாணவன் ஒருவரை நிர்வாணமாக்கி, தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பிறிதொரு மாணவன் உட்பட மூவர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை, மாதம்பே மற்றும் வெல்லபட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயது மாணவனொருவனும் 26 மற்றும்  34 வயதுடைய இரண்டு நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய பின்னர், குளிர்பானம் வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பிறிதொரு மாணவனும், இரு நபர்களும் கடைக்குச் சென்ற மாணவனை அருகிலிருந்த வீடொன்றுக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி, தாக்கிவிட்டு, அந்த மாணவனிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தந்தை இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே விசாரணைகளின்போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அம்பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.