சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை தொகை வழங்காத பொதுத்துறை கூடுதல் செயலருக்கு பிடியாணை

37 0

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 97வயது சுதந்திர போராட்ட வீரருக்குஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021-ம் ஆண்டு முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஅனிதா சுமந்த், 1987-ல் அவர் விண்ணப்பித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றபோதும், 2008-ம்ஆண்டு அளித்த ஒரு விண்ணப்பத்தை கருத்தில் கொண்டு 2008 முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய நிலுவையை வழங்கும்படி தமிழகபொதுத்துறை கூடுதல் செயலா ளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தாததால் சுதந்திர போராட்ட வீரர்வேலு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு:

ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க அவகாசம்வழங்கியும் தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடியாணை பிறக்கப்படுகிறது. இதனை செயல்படுத்தி, ஜூலை 8-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.