இலங்கை – ஜப்பானுக்கு இடையில் பொருளாதாரத்தொடர்புகளை விரிவுபடுத்துதல்

29 0

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையில் ஜப்பானின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் பல்வேறு உயர்மட்டப்பிரதிநிதிகள் குழுவினருடன் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 1 – 7 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, சிரேஷ்ட அமைச்சரவை செயலாளர் ஹயாஷி யொஷிமஸா, நீதியமைச்சர் யுச்சி கொய்ஸுமி ஆகியோர் உள்ளடங்கலாக பல்வேறு உயர்மட்டத்தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் நீட்சியாக இலங்கையில் முக்கிய முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜைக்கா) சிரேஷ்ட நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுக்கும் அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை மீள வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் ஜைக்கா அதிகாரிகள் பாராட்டு வெளியிட்டதாகவும், இலங்கையில் புதிய துறைகளில் முதலீடு செய்வது குறித்து கவனம்செலுத்துமாறு அவர்களிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் அலி சப்ரி அவரது ‘எக்ஸ்’ தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுகுடா யஸுவோ தலைமையிலான உயர்மட்டக்குழுவினருடன் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்துறைசார் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.