கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் தப்பியோட்டம்

54 0

அநுராதபுரம் , ஹித்தோகம பிரதேசத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்றவர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார்.

பின்னர், நீதிமன்றினால் இவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, இவரது உடலில் சில காயங்கள் காணப்பட்டதால் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.