வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்

25 0

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றது.

 

 

ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில்,

 

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும்  அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்ச வேலைத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயணித்து,  தற்போது எவ்வாறு வெற்றிகரமான பிரதிபலன்கள் எட்டப்பட்டுள்ளன என்பதை  ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் அளவு 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு  அதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களகாகும். 11.7 பில்லியன் டொலர்கள் பல்தரப்புக் கடன்களாகும். 14.7 பில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்களாகும். அதில் 12.5 பில்லியன் டொலர்கள் பிணைமுறிப் பத்திரங்கள் என்றும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

கடன் மறுசீரமைப்பு மற்றும்  அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து, பல்வேறு கருத்துக்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவிக்கப்படுகின்ற போதும்  அவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானது  என்றும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு தியாகமும் செய்யாமல் வெளிநாட்டுக் கடனுக்கான சலுகைகளைப் பெற வேண்டும் எனப் பலரும் பரிந்துரைத்தாலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் சர்வதேச நடைமுறைகளின்படி அவ்வாறு செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பிரதான கடன் தொகையைத் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினாலும், உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன் வழங்குநர்கள் பிரதான கடன் தொகையை ஒருபோதும் துண்டிக்க மாட்டார்கள் என்பதோடு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் , கடன் சலுகை காலம், வட்டி விகிதக் குறைப்பு  என்பவற்றுக்கு சலுகை பெற முடியும் எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரம் கிடைத்தால் ஆரம்பக் கடனில் 50% வீதத்தை  துண்டிக்க கடன் வழங்கும் நாடுகளுடன்  பேச்சுவார்த்தை நடத்துவதாக  சிலர் கூறினாலும்  அந்த அறிக்கைகள் அவர்களுக்கு சர்வதேச பொருளாதார முறைமைகள் பற்றிய எந்தவித புரிதலும் இல்லை என்பதையே காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பை  எவ்வாறு  மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கடன் வழங்குநர்கள் அல்லது கடன் பெற்றவர்களுக்கு இல்லை என்றும், அது தொடர்பில் தீர்மானம் எடுப்பது  சர்வதேச நாணய நிதியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாட்டில் கடன் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தேவையான  மறுசீரமைப்புத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கிறது என்றும் தெரிவித்தார்.

நடுத்தர வருமானம் பெறும்  நாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வுக் கட்டமைப்பை கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக பயன்படுத்திய முதல் நடுத்தர வருமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.

எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக நிலவிய வரிசையை முடிவுக்கு கொண்டு வந்தமை சிறந்த செய்தியா ? துரதிஷ்ட செய்தியா ? நாட்டு மக்கள் தீர்மானிப்பார்களாக என்றும் ஜனாதிபதி கூறினார்.

நெருக்கடியான நிலையில் அரசியல் அதிகாரத்துக்கும் அரசியல் பிரபல்யத்துக்காகவும் நான் தீர்மானங்களை எடுக்கவில்லை. நாட்டுக்காகவே கடுமையான தீர்மானங்களை எடுத்தேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய புவிசார் அரசியல் போக்குகள் உட்பட பல சவால்கள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், சர்வதேச நாயண நிதியத்தின் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 15 மாதங்களுக்குள், உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கு  உடன்பாட்டை எட்ட முடிந்தது என்றும், இவ்வாறான குறுகிய காலத்தில், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்ட  நடுத்தர வருமானம் பெறும்  நாடுகளில் முதன்மை நாடாக இலங்கை முன்னணியில் இருப்பது ஒரு சிறப்பான வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2028 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, 2.1% அல்லது அதற்குக் குறைவான வட்டி விகிதங்களைப் பேணுதல், கடனை முழுமையாகச் செலுத்த 2043 வரையிலான சலுகைக் காலம் கிடைத்தமை, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் இணைத் தலைமைத்துவம் வகிக்கும்  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக  செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பன எட்டப்பட்ட உடன்பாடுகளில் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களின் அடிப்படையில்,  கடன் சேவைச் செலவை ஒத்திவைக்கக் கூடிய வகையில்  பிரதான கடன் தொகையினை திருப்பிச் செலுத்துவது  படிப்படியாக அதிகரிக்க நேரிடும் என்றும்,  இதன் விளைவாக  05 பில்லியன் டொலர் இலங்கைக்கு கடன் சேவைத் தொகை  மீதமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.