ரயிலில் இருந்து தப்பியோடிய ரயில் சாரதியின் பணி இடைநிறுத்தம்!

24 0

சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

நேற்று (30) கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி புறப்படத் தொடங்கிய ரயிலின் சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது, ​​ரயிலில் இருந்த பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி சாரதியை ஈடுபடுத்தி ரயில் கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், குடிபோதையில் இருந்த ரயில் சாரதியை ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை சென்றடைய வேண்டும் என்ற நிலையில், மதியம் 2.30 மணிக்கே ரயில் கண்டியை வந்தடைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.