திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கக் கோரி போராட்டம்

30 0

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்பொன்று இன்று திங்கட்கிழமை  (01) திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம்பெற்றது.

குறித்த  கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர் ,தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தனர்.

இப் புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்காயிலை ஆதினம் அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்.

இதில் ஆலய பரிபாலன சபை தலைவர் உறுப்பினர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுனருக்கு இது தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது குறித்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இப் புனித தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்காலிக கடைகள் அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் பல இடரபாடுகளை சந்திக்க நேரிடுவதாக ஆலய பரிபாலன சபை மூலமாக உரிய தரப்புக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறப்பட்டது.

இது தொடர்பில் 2019.06.10 மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது ஆலயம் ஊடாக செல்லும் கடைகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான விடயத்தை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ,கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்கள் 11.10.2022 குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் தெரிவிக்கப்பட்டும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் சட்டவிரோத செயற்பாடு ஒன்று இடம் பெற்றது எனவே ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க இது போன்ற நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து வியாபாரிகளின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது எனவே அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் மாற்று இடத்தை வழங்கி வியாபாரத்தை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.