போதைப்பொருள் விற்பனை செய்து நான் பணம் சம்பாதிக்கவில்லை – பியூமி ஹன்சமாலி

31 0

சூட்சுமமான குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி இன்று (01) திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில்  முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது பியூமி ஹன்சமாலி கருத்து தெரிவிக்கையில்,

நான் மிகவும் நேர்மையான முறையில் இந்த பணத்தை சம்பாதித்தேன் . போதைப்பொருள் விற்பனையோ அல்லது சட்டவிரோதமான முறையிலோ இந்த பணத்தை நான் சம்பாதிக்கவில்லை.

தனி ஒரு பெண்ணாக எனது தொழிலை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எனக்கு  20 வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படும் அனைத்து தகவலும் போலியானது. என்னிடம் 9 வங்கி கணக்குகள் மாத்திரமே உள்ளன. அவற்றை எனது தொழில் நடவடிக்கைகளுக்காக நான் பயன்படுத்தி வருகின்றேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான்  எந்தவித அச்சமுமின்றி நான் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.