யேர்மனி பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024.

265 0

தமிழ் கல்விக் கழகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயம், கல்விக் கழகத்தின் கல்வி கலை விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுனர்ப் போட்டிகளை 22-06-2024 அன்று சிறப்பாக நடாத்தியது.
தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தமிழர்தாயகத்தையும் காத்திடும் நோக்கோடு கழத்தில் விதையாக வீழ்ந்துவிட்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்ந்து யேர்மன்தேசியக்கொடி, தமிழீழதேசியக்கொடி மற்றும் தமிழாலயக் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து, போட்டியாளர்களால் வெற்றிச்சுடர் மைதானத்தினுள்ளே ஏந்திவரப்பட்டு, ஏற்றிவைத்து உறுதியேற்புடன் போட்டிகள் தொடங்கின. அயற் தமிழாலயங்களும் இணைய 110க்கு மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக நடைபெற்றது.
கல்வி கலையோடு, மனிதர்களின் உடல் உள ஊக்கத்தை பேணுவதில் விளையாட்டிற்கும் கணிசமான பங்குண்டு என்பதை தமிழினத்திடையே ஏற்படுத்திட இதுபோன்ற விளையாட்டுப் போட்டி துணைபுரியும். தமிழாலயங்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் நலன்விரும்பிகளின் நிறைவான பங்கேற்பும் போட்டிக்கு வளம் சேர்த்தன. நிறைவாகத் தேசியக் கொடிகளின் கையேற்பையடுத்து, நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் என்ற நம்பிக்கையின் கூட்டுணர்வோடு பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி 2024 நிறைவுற்றது.