சென்னானூரில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு

35 0

சென்னானூரில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னானூரில் தொல்லியல் துறை அகழாய்வுப் பணியைக் கடந்த 18-ம் தேதி சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனிடையே, இப்பணி தொடர்பாக தொல்லியல் துறை அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது:கடந்த 6 நாட்களாக சென்னானூரில் அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இதில், பி2 என்ற அகழாய்வுக் குழியில் 53 செ.மீ ஆழத்தில் உடைந்த நிலையில் புதிய கற்கால வெட்டுக்கருவி கிடைத்துள்ளது. இக்கருவி 6 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் உள்ளது. இக்கருவி 4,000 ஆண்டு பழமையானது.

புதிய கற்காலத்தில்தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது. அப்போது, 30 முதல் 25 செ.மீ நீளமுள்ள கற்கருவியைத்தான் விவசாய பணிக்குப் பயன்படுத்தினர். தற்போது, கண்டறியப்பட்டுள்ள இக்கருவி சிறியது என்பதால் மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும், கோடாரியைப்போல பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.