யாழ்.கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் !

30 0
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது  இந்த இரண்டு வெதுப்பகங்களும் சுகாதார சீர்கேடாக இயங்கிய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது இந்த இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் நேற்று திங்கட்கிழமை (24) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.

வழக்குகளினை விசாரித்த நீதவான்  ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும் மற்றைய வெதுப்பகத்தினை சீர் திருத்துமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்துள்ளார்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.