பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி உடமைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது !

26 0

மிரிஹான பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை  தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் துனுவாங்கியாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரியை தாக்கியவர்கள் பொலிஸ் அதிகாரியின்  கழுத்தில் இருந்த இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க சங்கிலியையும் எழுபதாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் இருபதாயிரம் ரூபா பணம்  என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்  பதுளை போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்களை இன்று செவ்வாய்க்கிழமை (25)  நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.