விமானத்தில் இலங்கையரின் பயணப் பொதியில் திருட்டு ; இரு சீனப் பிரஜைகள் கைது

36 0

துபாயிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணித்த விமானமொன்றில் பயணித்த இலங்கையர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

36 மற்றும் 31 வயதுடைய இரண்டு சீன பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் பயணப் பொதியிலிருந்தே இவ்வாறு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இலங்கையரும் கைதுசெய்யப்பட்ட சீன பிரஜைகளும் நேற்று (23) அதிகாலை துபாயில் உள்ள அபுதாபி நகரத்திலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கையர் விமான நிலையத்தில் வைத்து தனது பயணப் பொதியைப் பார்த்த போது தனது பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட இலங்கையர் இது தொடர்பில் விமான நிலைய பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்டதாகக் கூறப்படும் இரத்தினக் கல் பதித்த மோதிரம், இரு தங்க மோதிரங்கள், தங்க மாலை, கைக் கடிகாரம் உள்ளிட்ட 11 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.