குருவிக் கூட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிப்பு ; சந்தேக நபர் கைது

39 0

குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 14 மாதம்பிட்டி பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 46 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,வத்தளை ஹுணுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள குருவிகள் இல்லாத குருவிக் கூடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குருவிக் கூடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 442 கிராம் 225 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.