பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

28 0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (24) காலை 7:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மேலும், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0-2.5 மீற்றர் வரை எழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அது கரையை நோக்கி வரும் அலைகளின் உயரம் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்படை சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.