தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளை இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு வெளிப்படுத்துகிறது

30 0

மிழ் அரசியல் தலைவர்கள் மாறுபட்ட நிலையிலே செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கருடனான சந்திப்பில் மாறுபட்ட நிலைப்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு  தொடர்ந்தும் முட்டுக்கட்டையாகவே இருக்கும்.

அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை பெறுவதற்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பின்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் இப்பிரச்சினையை நீடிக்கச் செய்வதே இவர்களது எண்ணங்களாக உள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்ற கருத்து நிலவும் சூழலில் அந்த வேட்பாளர்கள் அரசியலமைப்பில் உள்ள மாகாண முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்த சமிக்ஞையை காட்ட முனைகின்றபோதும் தமிழ் தரப்பு அதனை புகழ்ந்து பேசுவது போன்று வெளிப்படுத்தினாலும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் முன்னிலையில் பிளவுபட்ட நிலையிலேயே கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்துள்ளனர்.

இது இந்தியாவின் பங்களிப்பை கோருவது போன்று காட்டிக்கொண்டாலும் எமது அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களிடத்தில் தீர்க்கமான பார்வை ஒன்றும் இல்லாததையே வெளிக்காட்டி நிற்கிறது.

ஆயினும், நீண்ட காலமாக எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்திவருகின்ற 13ஆவது அரசியலமைப்பின் மாகாண முறைமை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை ஆரம்பமாக வைத்து முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதே தற்போதுள்ள நிலைமையில் பொருத்தமாக அமையும்.

எனவே, பிளவுபட்டுள்ள நிலையில் உள்ள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மக்களின் நலனிலிருந்து சிந்திக்க வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புக்களை எமது மக்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்துடன் அரசியல் அமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த இணக்கங்கள் கூறப்படுகின்ற நிலையில் இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகள் அர்ப்பணிப்புடன் பங்காற்ற வேண்டும் என்றார்.